``இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்.
விவசாயிகள் விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இன்னும் சில காலம் தொடர்ந்தால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புண்டு. விவசாயமும் விவசாயிகளும் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் அவர்கள் வகுத்த ஒப்பந்தங்களும்தான்'' - இப்படி மனம் கொதித்து பேசுகிறார் மாம்பாக்கம் விவசாயி வீரபத்ரன்.
கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கும் வீரபத்ரன், பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். பொருளாதாரத் துறையில் புகழ் பெற்ற பேராசிரியராக இருந்த எம்.ஜி.ரங்காவின் மாணவர். அரசு வேலை கிடைத்த போதும், விவசாயமே போதும் என்று இருந்துவிட்டார். மாம்பாக்கம் ஒன்றியத்தின் சேர்மனாகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். விவசாயிகளின் இன்றைய நிலை பற்றி அவர் மனம் புழுங்கிப் பேசிய பேச்சு இதோ...
''தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று சொல்லும் நிலைதான் பரவலாக இருக்கிறது. எல்லோருக்கும் கல்வி கொடுத்தார்கள். ஆனால், பண்டைய காலத்திலிருந்து விவசாயியின் குழந்தைகளுக்கு மட்டும் படிப்பே கொடுக்காமல் பாமரனாகத்தான் வைத்திருந்தார்கள்.
விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததற்கு காரணம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதுதான். உதாரணமாக, 1970ஆம் ஆண்டில் 35 குதிரை சக்தி கொண்ட ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய். அப்போது ஒரு மூட்டை நெல் (75 கிலோ) 45 முதல் 50 ரூபாய் வரை விற்றது. கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்ச ரூபாய். ஆனால், ஒரு மூட்டை நெல்லின் விலை 350 முதல் 400 ரூபாய்தான். கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். நெல்லின் பண்டமாற்று சக்தி (எக்ஸ்சேஞ்ச் வால்யூ) எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
அன்று ஒரு டன் இரும்பு ஆயிரம் ரூபாய். இருபது மூட்டை நெல் விற்று ஒரு டன் இரும்பை வாங்க முடிந்தது. இன்றைய தேதியில் 75 மூட்டை நெல் விற்றால்தான் வாங்க முடியும்.
அன்று ஒரு மாடு ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய். அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 0.67 காசுதான். இன்று அதே டீசல் 35 ரூபாய்.
அன்று தினக்கூலி வெறும் 2.50. இன்று நூறு ரூபாய். அன்று ஒரு மண்வெட்டி விலை இரண்டு ரூபாய். இன்று ஒரு மண்வெட்டியின் விலை 90 ரூபாய்.
எதற்காக இத்தனைப் புள்ளிவிபரங்களைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?
இவை எல்லாம் ஒரு விவசாயிக்குத் தேவையான முக்கியமான இடுபொருட்கள். விலை பார்க்காமல் ஒவ்வொரு விவசாயியும் இதை வாங்கியே தீரவேண்டும்.
தவிர, விவசாயியும் சாதாரண மனிதன்தான் என்கிற முறையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவன் செலவு செய்தாக வேண்டியிருக்குது. உதாரணமாக, அன்று ஒரு சோப் விலை ஐம்பது காசு. இன்று அதே சோப்பின் விலை 12 ரூபாய். அன்று ஒரு பிஸ்கட்டின் விலை 50 பைசா. இன்று 11 ரூபாய். அன்று ஒரு வேட்டி இரண்டு ரூபாய்க்குள் கிடைத்தது. இங்கு 50 ரூபாய்க்கும் அதிகம்.
அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டைகள் விற்றால் பவுன் பார்க்க முடியும்.
1970 முதல் 2000 ஆண்டுக்குள் தொழிற்சாலைப் பொருட்களின் விலை 35 முதல் 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு உத்யோகஸ்தர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துள்ளது. ரூபாய் கணக்கில் முதலில் போடப்பட்ட திட்டங்கள் ஆயிரமாகி, லட்சமாகி, இன்று கோடிகளை தாண்டிவிட்டது. ஆனால், நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் 8 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை யார் இதை உருவாக்கினார்கள் அல்லது எதனால் உருவானது? இதை சீர்படுத்த எந்த அரசியல்வாதியிடமாவது ஏதாவது திட்டம் இருக்கிறதா? மற்ற எல்லாப் பொருட்களின் விலையும் அபாரமாக உயரும். ஆனால் விவசாயி விளைவிக்கும் பொருட்கள் மட்டும் அவ்வளவு உயராது என்றால் அது என்ன நியாயம்?
கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக் கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்களே ஒழிய, படிக்காத விவசாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்று அவர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை! பருத்தித் தற்கொலைகள் எத்தனையோ நடந்த போதும், அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பல விதமான எதிர்ப்புகளுக்கிடையே தனது சாதுர்யத்தை பயன்படுத்தி நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டு வந்தார். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணச் சங்கம், நில நிர்வாகச் சட்டம், விலை நிர்ணய சட்டம், விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் எனக் கொண்டு சட்டங்களை இயற்றினார்.
இந்தச் சட்டத்தின்படி, எல்லா விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை நிலம் உயர்ந்துள்ளது போல, விவசாயத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அந்த விலைக்குப் பின்பும் அதிகம் ஏறவும், இறங்கவும் முடியாத படிக்கு, உற்பத்தியாளர் சந்தைகள் வாரந்தோறும் அமைக்கப்பட்டது. தேவைக்கு மேல் உற்பத்தி காட்டாமல் இருக்க, அதாவது விவசாயிகள், விவசாயம் செய்யாமல் சும்மா இருக்க பண்ணை எப்படி மானியம் கொடுத்தார்கள்.
இன்று அமெரிக்காலும், கனடாவிலும் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கிறார்கள். கொடுத்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். மானியத்தை உரிமையோடு வசூல் செய்ய அங்கு சட்டமே உள்ளது.
நம் நாட்டில் அரசியல்வாதிகள், விவசாயிகளின் உண்மையான பிரச்னையைக் கண்டறிவதற்கு பதிலாக, மானியத்துக்கு மேல் மானியம் கொடுத்தார்கள். மின்சாரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். இதனால் பம்ப்செட் பயன்பாடு பெருகியது. நிலத்தடி நீர் அதாலபாதாளத்திற்குப் போனது. உரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என எல்லா விவசாயிகளும் உரத்தை வாங்கி நிலத்தில் கொட்டினார்கள். மகசூல் பெருகுவதற்குப் பதிலாக நிலம் பாழாய் போனது மிச்சம்.
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். பரிதாபப்பட்ட அரசாங்கம், வட்டியை ரத்து செய்ததே ஒழிய கடனை ரத்து செய்யவில்லை. இன்றும் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த ஜென்மம் முழுக்க உழைத்தாலும் விவசாயி கடன் இல்லாமல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
`விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'எங்களுக்குத் தேவை எந்த இலவசங்களும் அல்ல. எங்கள் குறைகளைத் தீர்க்கும் சரியான திட்டங்கள்தான்' என்று ஒரே குரலில் சொல்ல வேண்டும். அந்தக் குரல் அதிகார அமைப்பில் உள்ளவர்களின் காதுகளை எட்ட வேண்டும். தற்போது விவசாயியின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும். விவசாயத்திற்கு ஒரு மரியாதை கிடைக்கும்!'' என்று பொருமித் தீர்த்தார் வீரபத்திரன்.
ஆர அமர யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதில் நிறைய நியாயம் இருப்பது புரியும்.
Article:
http://samsari.blogspot.com/2007/04/blog-post_19.html
# விவசாயம் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான்!
# பங்குச்சந்தை: பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்
இந்தியப் பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கி விற்பவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது PAN எண்ணை - அதாவது வருமான வரி எண் - உங்களது பங்குத்தரகருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் அந்த எண்ணை பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பார். ஆக, எந்த நேரத்திலும் எந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள் என்ர தகவலை அரசு நிறுவனங்கள், வருமான வரி அலுவலகம், காவல்துறை ஆகியவற்றால் தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த ஓர் ஆண்டில், வருமான வரி எண் இல்லாமல் யாருமே பங்குச்சந்தையில் முதலிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெளி நாடுகளிலிருந்து இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்.ஆர்.ஐகளுக்கும் அந்நிய நாட்டுக் குடிமக்களுக்கும் தடை உள்ளது. விதிவிலக்கு: வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்; ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய, பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் முதலீடு செய்யமுடியாது. இவர்கள் அனைவருமே பரஸ்பர நிதி - மியூச்சுவல் ஃபண்ட் - மூலம் மறைமுகமாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.
தனிமனிதர்களுக்குத்தான் கட்டுப்பாடே ஒழிய, அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors - FIIs) இந்தியப் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குள் முதலீடு செய்யமுடியும். இந்த FIIக்கள் முதலில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) இடம் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
ஆனால் இந்த இடத்தில் இந்த FIIக்கள் ஓர் ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு அந்நிய நாட்டவர் அல்லது அனுமதிக்கப்படாத என்.ஆர்.ஐக்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வழிசெய்துகொடுக்கின்றன.
அதற்குப் பெயர்தான் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ். இதைப் பார்ப்பதற்கு முன், இதைப்போன்றே உள்ள ஒரு நிதிக்கருவியைப் பார்ப்போம். அதற்குப் பெயர் டெபாசிட்டரி ரிசீப்ட்ஸ். ADR, GDR என்ற பெயர்களில் இவை பிரபலமாக உள்ளன.
இப்பொழுது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய நிறுவனப் பங்குகள் சிலவற்றை எடுத்துக்கொள்வோம். இன்ஃபோசிஸ், ரீடிஃப், சிஃபி போன்றவை. உண்மையில் இவற்றின் பங்குகள் ஏதும் நாஸ்டாக்கில் வர்த்தகமாவதில்லை. இரண்டு கட்டங்களில் இது நடக்கிறது. முதலில் ஒரு நிதி நிறுவனம் (வங்கி), இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகக்கூடிய பங்குகளை நேரடியாக அந்த நிறுவனத்திடமிருந்தோ (public offer), அல்லது sponsored முறையிலோ பெறுகிறது. இந்த நிதிநிறுவனத்தின் பெயர் டெபாசிட்டரி.
அந்தப் பங்குகளுக்கு இணையான வேறு கருவியை (டெபாசிட்டரி ரிசீப்ட்) இந்த டெபாசிட்டரி நிறுவனம் உருவாக்கி அவற்றை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஓடவிடுகிறது. ஒரு பங்குக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். அல்லது இரண்டு, மூன்று, நான்கு பங்குகளுக்கு இணையாக ஒரு டெபாசிட்டரி ரிசீப்ட் இருக்கலாம். இந்த டெபாசிட்டரி ரிசீப்டை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஈடுபடும் எவரும் வாங்கி, விற்கலாம். இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்; ஆனால் பல நேரங்களில் ஒரு சந்தையில் மற்றொரு சந்தையைவிட விலை அதிகமாகவோ குறைந்தோ இருக்கலாம். இடையிலான ஆர்பிட்ராஜை வைத்துப் பணம் சம்பாதிப்பது முடியாமல் போகும்.
அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்வது தடைசெய்யப்பட்டிருக்கும்போது இந்த முறையைக் கொண்டு அவர்கள் இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.
இந்திய நிறுவனம் டிவிடெண்ட், போனஸ் ஆகியவற்றை அளிக்கும்போது, டெபாசிட்டரி நிறுவனம் அவற்றைப் பெற்று, அவற்றை பத்திரமாக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மாற்றிக்கொடுக்கும்.
இதுபோன்ற சமயத்தில் செபி, இந்த அமெரிக்கத் தனி முதலீட்டாளர்களைப் பற்றி கவலைப்படாது. அவர்களது குலம், கோத்திரம் என்ன என்றெல்லாம் விசாரிக்காது. ஆனால் அந்த வேற்று நாட்டு (அமெரிக்கா) பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இந்த முதலீட்டாளர்கள் யார் என்பதைக் கட்டுப்படுத்தும்; அவர்களிடம் ஒழுங்காக வரி வசூலிக்கும்.
இப்பொழுது பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். இது டெபாசிட்டரி ரிசீப்ட்ஸுக்கு நேர் எதிர்.
இந்தியப் பங்குச்சந்தை பிற நாட்டுக் குடிமகன்களுக்குத்தான் தடை என்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்துகொண்டால் அனுமதிக்கப்படும் என்றும் பார்த்தோம் அல்லவா? இப்படிப் பதிவுசெய்துகொண்ட FIIக்கள், தனி ஆசாமிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் சார்பில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் பங்குகள் என்னவோ இந்த FIIக்கள் பேரில் இருக்கும். தனி ஆசாமிகள் கணக்குக்கு, அவர்களுக்கு பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனப்படும் PN ரசீதுகளைக் கொடுத்துவிடுவார்கள். அதாவது இது ஒரு பினாமி வழி.
யார் முதலீடு செய்கிறார்கள் என்பதை FIIக்கள் செபியிடம் இதுவரை சொன்னதில்லை. செபியும் கேட்டதில்லை. அப்படி செபி கேட்கப்போகிறது என்று விஷயம் கசிந்தால் உடனே பங்குச்சந்தை ஆட்டம் காணும். நிதியமைச்சரும் பயந்துபோய், இன்னும் கொஞ்சம் நாள் விட்டுவிடுவோம் என்பார். அதுதான் சென்ற வாரம் நடந்தது.
இப்பொழுது நமக்குத் தோன்றவேண்டிய கேள்விகள் இவை:
1. செபி ஏன் PN வழியாக வர்த்தகம் செய்வோரது தகவலைக் கேட்கவேண்டும்?
2. அப்படிக் கேட்டால் ஏன் இந்த ஃபாரின் வஸ்தாதுகள் பயப்படவேண்டும்? கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?
3. PN/FII-க்களுக்கு ஏன் இந்தியப் பங்குச்சந்தை/செபி/நிதியமைச்சர் பயப்படவேண்டும்?
4. இந்தியாவில் இருக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நாம் என்ன நிலையை எடுக்கவேண்டும்?
பதில்களைப் பார்ப்போம்.
PN வழியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்வோரில் உருப்படியான, நியாயமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தமது தகவலைச் சொல்ல பயப்பட மாட்டார்கள். ஆனால் பல கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதில் முதலாவது இந்தியாவில் கறுப்புப் பணத்தைத் தேக்கி, ஹவாலா வழியாக அதை வெளிநாடுகளுக்குக் கொண்டுசென்றுள்ளவர்கள். இரண்டாவது சர்வதேச தீவிரவாதிகள்.
இந்த இரண்டு ஆசாமிகளும் இந்தியப் பங்குச்சந்தைக்குள் பணத்தைப் போட விரும்புகிறார்கள். ஏன்? ஏனென்றால் இப்பொழுது இந்தியா ‘வளர்ச்சி' கதையால், இந்தியப் பங்குச்சந்தையில் நல்ல லாபம் புரளுகிறது. நல்லவர்கள் போல, கெட்டவர்களும் இந்த ‘வளர்ச்சி'யின் பயனை அறுவடை செய்ய விரும்புகிறார்கள். PN வழியாக இதைச் செய்தால் கேள்வி கேட்க யாருமே இல்லை.
PN வழியாக இந்தியச் சந்தையில் புரளும் பணம் சுமார் 90 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் கெட்ட பணமாக இருக்கலாம்.
கடந்த சில வாரங்களில் தேவையில்லாமல் இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டுள்ளதற்கு வெளிநாட்டுப் பணம் முக்கியமான காரணம். திடீரென PN-ல் கையை வைப்பதாக செபி அறிவித்ததுமே இவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால் பங்குச்சந்தை கீழே விழும் என்றெல்லாம் பயப்படாமல் செபி, இந்த விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளவேண்டும். PN வழியாக இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களுக்கும் PAN எண் போல ஒரு எண்ணை வழங்கவேண்டும். அட்ரஸ் ப்ரூஃப் இருக்கவேண்டும். தவறான ஆசாமிகள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வர்த்தகம் செய்துகொடுத்த FII-க்களை ஒட்டுமொத்தமாகத் தடைசெய்யவேண்டும்.
அதாவது யாரிடமிருந்து பணம் பெற்று பங்குச்சந்தை வர்த்தகம் செய்யவேண்டும் என்ற விதியை FII-க்கள் மீது புகுத்தவேண்டும்.
இதை ஏற்காத FII-க்களை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவில் முதலீடு செய்யும் மொபியஸ் என்னும் FII செபியின் விதிமுறைகளை ஏற்பதாகவும் PN முறையில் செய்யப்படும் முதலீடும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும் இன்று தகவல் வந்துள்ளது. பிற FII-க்கள் ஒத்துவந்தால் அனுமதிப்போம். இல்லாவிட்டால் துரத்திவிடுவோம்.
Article:
http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post_24.html
# வங்கிகளில் அரசு தலையீடு? எஸ். கோபாலகிருஷ்ணன்
வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.
அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.
வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.
இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.
விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.
வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.
நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.
இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.
அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.
ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.
முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.
இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.
இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?
நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).
Article:
http://bsubra.wordpress.com/2007/10/22/dont-rush-to-cut-policy-rates-monetary-fiscal-recipe-for-overheating-india/
# இந்தியாவா, சீனாவா?
பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றின் பெரிய dilemma இது தான். தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்தும் போது, “இந்தியாவிற்கு செல்வதா அல்லது சீனாவுக்கு செல்வதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நிறுவனங்கள் கன்சல்டன்சி நிறுவனங்களை தேடி செல்கின்றன.
இந்தியாவா, சீனாவா என்று குழம்பாமல் இரு நாடுகளிலும் வியாபாரத்தை விரிவு படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்தியா அல்லது சீனா” என்றில்லாமல் “இந்தியா & சீனா” என்று strategy அமைப்பதற்கு மூன்று காரணங்களை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
1. இரு நாடுகளும் பல துறைகளில் அபரீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்த வளர்ச்சி இன்னும் தொடரும். உதாரணத்துக்கு சீனாவில் 450 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 150 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 60 லட்சம் புது வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்! (ஏற்கனவே தவறுதலாக 24 கோடி என்று எழுதியிருந்தேன், Sorry..)
2. இந்தியாவும் சீனாவும் மாறுபட்ட துறைகளில் வல்லுனர்களாக உள்ளனர். உற்பத்தி துறைகளில் (manufacturing) சீனாவும் மென்பொருள் மற்றும் ஐ.டி. துறைகளில் இந்தியாவும் முண்ணணியில் இருப்பதால் இரு நாடுகளிலிருந்தும் பயனடையலாம்.
3. காப்புரிமையை (Intellectual Property) பாதுகாப்பதற்கு இரு நாடுகளிலும் வேலைகளை பகிர்ந்து கொடுப்பது நல்லது.
எந்த நாடானாலும் சரி, அந்த நாட்டின் கலாசாரத்துக்கு தகுந்தாற்போல தன் வியாபார உத்தியை மாற்றியமைத்தால் தான் நிறுவனங்கள் வெற்றியடைய முடியும்.
அப்படி செயல்பட்டதால் தான் Haier நிறுவனம் சீனாவில் பெரும் வெற்றியடைந்தது. கிராமங்களில் Haier விற்கும் வாஷிங் மெஷின்களில் துணிகளை மட்டுமல்லாது காய்கறிகளையும் வாஷ் செய்யலாம்!
நகரங்களில் Haier விற்கும் ஒரு குறிப்பிட்ட மாடல் வாஷிங் மெஷின்/ட்ரையர் ஒரு செட் துணியை மட்டும் சலவை செய்யக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் உள்ளது. பதினைந்து நிமிடத்தில் சலவை முடிந்துவிடும்.
இப்படிப்பட்ட வாஷிங் மெஷின்கள் சீனாவில் பெரிய ஹிட்.
இந்தியாவில் டிஸ்னி சேனல் வித்தியாசமான உத்திகளால் வெற்றி பெறுகிறது. அமெரிக்காவில் பெரும் வெற்றியடைந்த High School Musicals படத்தை இந்தியாவில் ஹிந்தியில் தயாரிக்கிறது. அமெரிக்க படத்தில் கதாநாயகன் கூடைப்பந்து வீரன். இந்திய படத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்.
இவர்களைப் போன்று Fox (Star TV) நிறுவனமும் “24” சீரியலை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்கலாம். அழுகை மெகா சீரியல்களை பார்த்து சோகத்தில் வாடும் என் இனிய தமிழ் மக்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும்.
Article:
http://tamilnithi.blogspot.com/2007/08/blog-post_08.html
# குரு திரைப்பட விமரிசனம் அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு
குரு திரைப்பட விமரிசனம்
அம்பானி:
முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு
http://tamilarangam.blogspot.com/2007/06/blog-post_07.html
90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல

