படித்தது ரசித்தது உங்களுக்காக....

.

செய்தி தலைப்புகள்

..........................................................................................

.

# ஆளுக்கொரு நீதி…

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தக்க நேரத்தில் ஒரு தீர்ப்பு மூலம் அறிவுரை கூறியிருக்கிறது.
பிகார் மாநிலத்தில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்கள், தங்களுக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்களின் ஊதிய விகிதமே வழங்கப்பட வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இரு அரசுகளின் டாக்டர்களும் செய்வது ஒரே வேலையைத்தானே, ஊதிய விகிதமும் ஒன்றாக இருந்தால் என்ன என்று பாட்னா உயர் நீதிமன்றம் பகுத்தறிவோடு சிந்தித்து, பிகார் கால்நடைத்துறை டாக்டர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
உடனே பிகார் அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. “பிகார் மாநில கால்நடைத்துறை டாக்டர்களின் பணிமுறை, பணியாற்ற வேண்டிய பகுதி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் போன்றவற்றில் மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டும் அல்லாது மத்திய அரசுக்குள்ள நிதி வசதி பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க மத்திய அரசின் ஊதிய விகிதத்தை கால்நடை டாக்டர்களுக்கு அமல்படுத்தினால் அதையே முன் உதாரணமாகக் கருதி மற்ற பிரிவினரும் கேட்கத் தொடங்கலாம். இது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடும்’ என்று சுட்டிக்காட்டியது.
உடனே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், “ஊதிய விகிதத்தைத் தீர்மானிக்க வேண்டியது அரசின் நிர்வாகத்துறை; அதில் தேவையில்லாமல் நீதித்துறை தலையிட வேண்டியதில்லை’ என்று தக்க நேரத்தில் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக அரசுக்கு, அதிலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு; மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் ஊழியர்கள் கேட்க வேண்டும் என்றுகூட காத்திராமல் உடனே அறிவித்து அவர்களுடைய நன்றியையும் பாராட்டையும் பெற்றுவிடுவார்.
மத்திய, மாநில அரசுகளின் ஊதியக்குழுக்களின் நிழலே படியாத பொதுமக்கள்தான் பாவம், இதையெல்லாம் ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளில், “செய்யும் வேலைக்கு கூலி’ என்று மட்டுமே பேசப்படுகிறது. அதே போல வேலைக்கு வராத நாள்களுக்கு கூலி கிடைக்காது.
அரசு ஊழியத்தில்தான் அடிப்படை ஊதியம் தவிர, அகவிலைப்படி (விலைவாசி உயரும்போதெல்லாம் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஈடு செய்யும் ஏற்பாடு), நகரங்களில் பணிபுரிந்தால் நகர ஈட்டுப்படி, வாடகைப்படி, சிறப்புப் படி, இடர்ப்படி என்று “படிப்படியாக’ பல படிகள் அளக்கப்படுகின்றன. (இவையே போதாது என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை.)
இவை போக, ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் “இன்கிரிமெண்ட்’ எனப்படும் ஊதிய உயர்வு. அதுபோக ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு -அதுவும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே -ஊதிய உயர்வு என்று அரசு ஊழியர்களின் காலம் கழிகிறது.
நாடு முழுக்க ஒரே மாதிரியான தொழில் செய்கிறவர்களுக்கு, ஒரே மாதிரி ஊதியம் கிடைக்க “”தேசிய ஊதியக் கொள்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கையே “கங்கை-காவிரி இணைப்பு’ போல நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
வேளாண்மை, தொழில், சேவை ஆகிய துறைகளிலேயே வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே ஊதிய வேற்றுமை நிலவுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் வேறுபடுகிறது. நாட்டிலேயே வடக்கு, மேற்கு மாநிலங்களில் ஊதியம் கட்டுபடியாகும் விதத்திலும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவும் இருக்கிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களும் இந் நாட்டின் வாக்காளர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குடும்பங்களில் மொத்தம் எத்தனை வாக்குகள் என்று கணக்கிட்டு சலுகைகள் தரப்படுவதில்லை. கூலி உயர்வு கேட்கக்கூட ஒரு அந்தஸ்து தேவைப்படுகிறது இந்த நாட்டிலே!

0 comments: