தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.
நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.
மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.
இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.
1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.
2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?
எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.
விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.
Article:
http://bsubra.wordpress.com/2007/10/16/law-on-protection-of-waterbodies-vs-govt-buildings-encroachment-environment/
# நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள் வி. கிருஷ்ணமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment